கண்ணாயிரம் நடத்திய ஓட்டப்பந்தயம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannayiram’s race/ comic story/ Tabasukumar
26.1.2023
கண்ணாயிரம் தன் மனைவி பூங்கொடியுடன் குற்றாலத்தில் குளிக்கச்சென்றார். அவர் உடலில் எண்ணை தேய்த்துசென்றதால் ..அருவியில் குளிக்கக்கூடாது என்று போலீசார் அவரை விரட்டியடித்தார்கள்.இதனால் மனம் வருந்திய கண்ணாயிரம் அருவியில் குளித்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சைகையால் ஓட்டலில் உள்ள அறைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
ஆனால் ஓட்டலுக்கு செல்லும் வழி மறந்துவிட்டதால் யாராவது வந்தால் அவர்களுடன் செல்லலாம் என்று காத்து நின்றார். அப்போது அந்த வழியாகவந்த ஒருவர் கண்ணாயிரத்திடம் ஓட்டலுக்கு போறேன் வர்ரீங்களா என்று கேட்க கண்ணாயிரம் அவருடன் நடந்துசென்றார்
.அறை எண் ஆறு மறக்காமல் இருக்க ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று கையை விரித்துபாடியபடி செல்ல எதிரே வந்த ஒருவர் கண்ணாயிரம் கையில் ஒரு காசை போட்டுவிட்டு கையும் காலும் ஒழுங்காத்தானே இருக்கு…ஏன் பிச்சை எடுக்கிற என்று கேட்க கண்ணாயிரம் அவரை பிடித்து தாக்கி சத்தம் போட அந்த நபர் தப்பி ஓடினார்.
இதை பார்த்த மற்றொரு நபர் கண்ணாயிரத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக நினைத்து..கண்ணாயிரம் கூடவந்தவரிடம்.. ஏன்சார். குற்றாலத்தில் ஒருவாரம் தங்கவைத்து சிகிச்சை கொடுக்கவேண்டியதுதானே.. கால் விலங்கை கழற்றி கூப்பிட்டுவாரீங்க என்று சொன்னார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் டென்சனாகி அந்த நபர் கழுத்தை நெரிக்க…அவர் திணற கண்ணாயிரத்துடன் வந்தவர் கண்ணாயிரத்தை சமாதானப்படுத்தினார். கழுத்து நெரிபட்ட நபர் கண்ணாயிரம்பிடியிலிருந்து தப்பித்து ..அம்மாடி என்று கழுத்தை தடவினார்.
கண்ணாயிரத்துடன் வந்தவரிடம் அவர் ஏன்சார்..இப்படி பைத்தியம்பிடித்தவரை வெளியே கூட்டிட்டு வர்ரீங்க..கூட ஒருவாரம் தங்கியிருந்து சிகிச்சை கொடுக்கலாமுல்லா என்று சொல்ல கண்ணாயிரத்துடன் வந்தவர் ஆத்திரத்தில்.. யோவ்… முட்டாள் தனமா பேசாதய்யா.. குற்றாலத்திலே பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்க இப்போ எந்த இடமும் இல்லை. ஏற்கனவே இருந்த இடத்தையும் பூட்டிட்டாங்க. நானும் அந்த இடத்தைத் தேடித்தான் வந்தேன். ஒண்ணும் கிடைக்கல..நீ விவரம் தெரியாம பேசுறீய…நீ இந்த ஊரா..வெளியூரா..உனக்கு அறிவு இருக்கா.. இல்லையா என்று சத்தம்போட்டு கத்த… அந்த நபர்..அடடே ஒரே நேரத்திலே இரண்டு பைத்தியங்களுக்கிட்டே மாட்டிக்கிட்டேனே என்றவாறு அலறி அடித்து ஓடினார்.
அதைப்பார்த்த அவர் கண்ணாயிரத்திடம் வாங்க போவோம் ஓட்டலுக்கு..என்று அழைத்தார். கண்ணாயிரத்துக்கு அவர் மேல் சின்னசந்தேகம் வந்தது.
நானும் குற்றாலத்தில் பைத்தியத்துக்கு சிகிச்சை கொடுக்கும் இடத்தை தேடித்தான் வந்தேன் என்று சொல்கிறாரே ஒரு வேளை இவரும் அவர்தானோ…பைத்தியமா இருந்து நம்மை கழுத்தை பிடிச்சிட்டா என்ன பண்ணுறது என்று யோசிக்கத்தொடங்கினார்.
அதைப்பார்த்த அந்த நபர்…ஏன் அப்படியே நிக்கிறீங்க…பயப்படாம வாங்க..நான் இருக்கேன்ல. என்று சொல்ல கண்ணாயிரம் ம் வர்ரேன் என்றார்.
எதுக்கும் ஒரு ஓரமா போவோம்..நம்ம கையிலேதான் கம்பு இருக்க..கழுத்தை பிடிச்சா ஒரு போடு போட்ற வேண்டியதுதான் என்று நினைத்தார்.
அந்த நபரோ…ஏன் தயங்குறீங்க..வாங்க என்று கண்ணாயிரத்தின் கழுத்தில் கையைப்போட்டு அழைத்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரம்..ஆஹா..கழுத்திலே கையைப்போட்டுட்டானே.. என்ன செய்யுறது என்று நெளிந்தார்.சார்..
நான்வர்ரேன்..நீங்க முன்னே போங்க என்று கண்ணாயிரம் சொல்ல அந்த நபர் உங்களை ரொம்ப பிடிச்சுப்போச்சு.. நீங்க என் தோழர்..நான் உங்க தோளிலே கைபோட்டுக்கிட்டு வர்ரேன் என்றார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை. என்னசெய்யலாம் என்று யோசித்தார். சார்…நான் எண்ணை தேய்ச்சிருக்கேன்..என் கழுத்திலே கைபோட்டியன்னா உங்ககையெல்லாம் எண்ணையாகிவிடுமே என்றார்.
அதற்கு அந்த நபர்..பரவாயில்லை. ஓட்டலுக்குப் போயி கையை கழுவிக்கிடுவன் என்று சொன்னார்.
விடமாட்டான் போலுக்கே என்று நினைத்த கண்ணாயிரம் மெல்ல…சார்…சார்..எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு .யார் என்தோளில் கைபோட்டாலும் கடிச்சி வச்சிருவேன்… நீங்க தெரியாத ஆளுங்கிறதால சொல்லுறேன் என்று சொன்னார்.
அதைக்கேட்டதும் அந்த நபர் அதிர்ச்சியுடன் அப்படியா முன்னமே சொல்லியிருக்கலாமே என்று சொல்லியபடி கண்ணாயிரத்தின் கழுத்திலிருந்து கையை எடுத்தவர் பயத்தில் முன்னே வேகமாக நடக்கத்தொடங்கினார். கண்ணாயிரம் அவர் பின்னால் நடந்து சென்றார். முன்னால் சென்ற நபர் கண்ணாயிரத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றார். ஏன் இவன் திரும்பி திரும்பி பார்க்கிறான்.. போக வேண்டியதுதானே.. எப்போ நம்மீது பாய்ந்து கடிப்பானோ தெரியலையே என்று பின்னால் மெதுவாக நடந்தார்.
முன்னால் நடந்த நபரோ.கண்ணாயிரத்துக்கு உண்மையிலே பைத்தியம் என்று நினைத்து…அடே கழுத்திலே கையைப்போட்டால் கடிப்பேங்கிறான்..கேஸ் முத்திப்போச்சு போலிருக்கு…எதுக்கும் நாம முன்னே தள்ளியேப் போவோம் என்று வேகமாக நடந்தார். கண்ணாயிரம் தன்னை நெருங்கிவாராரா என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றார்.
கண்ணாயிரமும் ஆ..உஷாரா இருக்கணும் டே..ஆளு நீட்டா டிரஸ்போட்டிருக்கான்னு ஏமாந்திடக்கூடாது.. பைத்தியத்துக்கு சிகிச்சைபெறத்தான் குற்றாலத்திலே இடம்தேடிவந்திருக்கான் போல..இடம் கிடைக்கலன்னவுடன் கோபத்தில் யாரைதோளில் கைபோட்டு கடிக்கலாமுன்னு நினைக்கிறான். படுபாவி பய..எங்கே போனாலும் நம்ம கிரஹம் நம்மைவிடமாட்டேங்குது..என்று உள்ளுக்குள் அழுதபடி அந்த நபரை முறைத்தபடி நடந்தார்.
திடீரென்று திரும்பிப்பார்த்த அந்த நபர் கண்ணாயிரம் முறைப்பதைபார்த்து ..அய்ய்யோ..பைத்தியம் முற்றிக்கிட்டு வருதுபோல..இன்னைக்கு அமாவாசை வேற..நம்மளை கடிச்சிகிடிச்சி வச்சிப்புட்டான்னா என்ன பண்ணுறது…சும்மா நின்னவனை கூப்பிட்டுவந்தது தப்பாப்போச்சு என்று வேகமாக நடந்தார்.
கண்ணாயிரம் வாராரான்னு பார்க்க மெல்ல திரும்பிப்பார்த்தார். உடனே கண்ணாயிரம்..ஆ.விடமாட்டான் போலிருக்கே..பயம் காட்டிடவேண்டியதுதான் என்று நினைத்து..வாயைத்திறந்து பல்லைக்காட்டி ஆ..என்று இரண்டு கைகளையும் கழுத்தை நெரிப்பதுபோல் பயம் காட்டினார்.
அதைப்பார்த்த அந்தநபர்..ஆ…பின்னால வருகிறவன் பைத்தியம்தான்னு நூறு சதவீதம் உறுதியாப்போச்சு.. தப்பிச்சா போதும் என்று ஓட ஆரம்பித்தார். என்ன ஓடுறாரு .நம்மள விட்டுட்டு போயிடுவாரோ..நமக்கும் பாதை தெரியாது. என்ன பண்ணுறது. நாமும் அவர் பின்னால ஓடவேண்டியதுதான் என்று நினைத்தார். அவ்வளவுதான் முன்னால் சென்ற நபரை துரத்திக்கொண்டு கண்ணாயிரம் ஓடினார். அவர் ஓடிவருவதை பார்த்ததூம் முன்னால் ஓடிய நபர்..அய்ய்யோ உயிருக்கு வந்தது ஆபத்து .எப்படியாவது பைத்தியத்துக்கிட்டே இருந்து தப்பிஓட்டலுக்கு ஓடிவிடவேண்டும் என்று நாலுகால் பாய்ச்சலில் ஓடினார். கண்ணாயிரமும்விடவில்லை. கக்கத்தில் குடையைவைத்துக்கொண்டு துண்டையும் வேட்டியையும்தோளில் தொங்கவிட்டபடி… என்னைவிட்டுட்டா ஓடப்பாக்கிற…உன்னைவிடமாட்டேன் என்றபடி கையைமடக்கிக்கொண்டு ஓட்டப்பந்தய வீரரை போல் துரத்திக்கொண்டுஓடினார்.
எதோ ஓட்டப்பந்தயம் நடக்கு போலிருக்கு என்று நினைத்தவர்கள் இரண்டு பேர் மட்டும் சம்மந்தம் இல்லாம ஓடுறாங்க என்று நினைத்தனர்.
ஓடுகின்ற ஓட்டத்தைபார்த்து ஏதோ விபரீதம் என்று உணர்ந்த ஒருத்தர்.. கண்ணாயிரத்தின் கையைப்பிடித்து என்ன பிரச்சினை என்று கேட்க கண்ணாயிரம் அவர் கையைத்தட்டிவிட்டு போய்யா..விவரம் தெரியாம தடுக்கிற.. அவன் விட்டுட்டு போயிட்டான்னா..நான் எங்கே போறது என்றபடி கண்களை உருட்டிக்கொண்டு ஓடினார். முன்னால் ஓடிச்சென்றவர் சற்று திரும்பி பார்த்துவிட்டு..அய்யய்யோ,,கொலைவெறியோடு ஓடிவர்ரானே..அவன் பிடிக்கிறதுக்குள்ளே ஓட்டலுக்குள் ஓடிவிடவேண்டும் என்று பயங்கரமாக ஓடினார்.
ஏன் இப்படி ஓடிறாரு. .பைத்தியம் அதிகமாயிட்டு போலிருக்கு…அதான்வெறிகொண்டு ஓடுறாரு ..எதுக்கும் நாமஜாக்கிரதையாக இருக்கணும் .என்றபடி கண்ணாயிரம் பின் தொடர்ந்து ஓடினார்.
ஒரு வளைவு வந்தபோது முன்னால் ஓடியவர் வேகமாக மறைந்துவிட அய்யய்யோ..ஆளைக்காணம் என்றபடி கண்ணாயிரம் வேகமாக ஓடிவளைவை அடைந்தார்.
முன்னால் ஓடிய நபர் வெகு தூரத்தில் ஓடுவது தெரிய..ஆ..என்னைவிட்டுவிட்டு ஓடிட முடியுமா என்றபடி தனது முழுபலத்தையும் பயன்படுத்தி பல்லை கடித்தபடி கண்ணாயிரம் பின்தொடர்ந்து ஓடினார்.முன்னால் சென்ற நபர் கண்ணாயிரத்தைப் பார்த்துவிட்டு..என்ன பல்லை கடிச்சிக்கிட்டு ஓடிவர்ரான்…நம்மளை கடிக்காம விடமாட்டான் போலிருக்கே…எப்படியாவது ஓட்டலுக்குள் ஓடிவிட்டோமுன்னா தப்பிடலாம் என்றபடி தம்கட்டி ஓடினார்.
இரண்டு வளைவுகளைத்தாண்டி வேகமாக ஓடி ஓட்டலுக்குள் புகுந்து வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து மூச்சுவாங்கினார்.
பின்னால் சுற்றி சுற்றிஓடிவந்த கண்ணாயிரம் ஓட்டலுக்குள் ஓடிவந்து அங்கே வரவேற்பறையில் நாற்காலியில் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தவர் பின்னால் சென்று பே…என்று கத்தினார்.
அதைக்கேட்டு அலறிய அந்த நபர்.. கண்ணாயிரத்தைப்பார்த்து..பைத்தியம்…பைத்தியம் என்று கத்த கண்ணாயிரமோ ஆத்திரத்தில் நீ பைத்தியம்..உங்க தாத்தாபைத்தியம் என்க அந்த நபரோ…நான் பைத்தியம் இல்லை..நான் பைத்தியம் இல்லை என்று கத்தினார்.கண்ணாயிரம்..ஆ..பொய் சொல்லக்கூடாது.. பைத்தியத்துக்கு சிகிச்சை பெறுவதற்காகத்தான் குற்றாலம் வந்தேன்னு நீதானய்யா சொன்னே என்று மடக்க அதற்கு அந்த நபர்..அய்யோ எனக்கு பைத்தியம் இல்லை. என் சொந்தக்காரர் ஒருவருக்கு பைத்தியம். அவருக்கு சிகிச்சை கொடுக்க குற்றாலத்திலே இடமிருக்கான்னு பார்த்தேன். அந்த இடமில்லே என்றார்.
உடனே கண்ணாயிரம் புன்னகையுடன்..அப்போ…உங்களுக்கு பைத்தியம் இல்லையா…உங்க சொந்தக்காரருக்குத்தான் பைத்தியமா..நான்தான் தப்பா நினைச்சிட்டேன்..என்று சொல்லி சிரித்தார்.
உடனே அந்த நபர்..நீங்க…என்று கையை நீட்ட கண்ணாயிரம் பயத்துடன் ஏங்க..நான் பைத்தியம் இல்லைங்க. .என்றார்.
உடனே அந்த நபர்..ம்..பொய் சொல்லாதீங்க.. அப்போ ஏன் கழுத்திலே கைவச்சா கையை கடிப்பேன்னு சொன்னீங்க என்று கேட்க..கண்ணாயிரம் அப்பாவியாக.. உங்களை வேறமாதிரி நினைச்சேன்.. அதான் அப்படி சொன்னேன் என்க அந்த நபர் அடே நாம இரண்டு பேருமே பைத்தியம் இல்லை. ஆனா பைத்தியமுன்னு நினைச்சு ஓடியிருக்கோம்…ஓஹோ…என்று சிரித்தார்.
கண்ணாயிரமும் .ஹாஹா என்று குலுங்கிகுலுங்கி சிரிக்க இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர் மனதுக்குள் இரண்டு பைத்தியங்கள் என்று சொல்லிக்கொண்டு அவரும் அவர்களூடன் சேர்ந்து சிரித்தார்.
கண்ணாயிரம் அவரை ஒருமாதிரியாக பார்த்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.