மின்சாரத்துக்கு பயந்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannayiram afraid of electricity/Comedy story/ Tabasukumar
7.8.2023
கண்ணாயிரம் சுற்றுலா பஸ்சில் பாபநாசம் சென்றார்.பாபநாசத்தில் பஸ் நின்ற போது கீழே இறங்கவா வேண்டாமா என்று யோசிக்க பயில்வான் வந்து சொன்னவுடன் கீழே இறங்கினார்.
பாபநாசத்தில் தண்ணீர் பெருகி ஓடியதை பார்த்த கண்ணாயிரம் அந்த தண்ணீரின் அழகை ரசித்தார்.அப்போது அங்கு வந்த சுடிதார் சுதா அதை பார்த்து பாபநாச தண்ணீரின் மகிமையை எடுத்து சொல்ல கண்ணாயிரம் வாய்பிளந்து கேட்ட வண்ணம் இருந்தார்.
அப்போது பாபநாசம் தண்ணீரில் இருந்து மின்சாரம் எடுக்கிறார்கள் என்று சுடிதார் சுதா கூறியதும் கண்ணாயிரம் ஆ..என்ற படி சற்று தள்ளி நின்றார். அதை பார்த்த சுடிதார் சுதா சிரித்தபடி பாபநாசம் ஆற்றில் இறங்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரம்..என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு..படிச்ச புள்ளை மாதிரி தெரியுற..ஆனா விவரம் இல்லையே..என்று கோபத்தில் சுடிதார் சுதா கையை பிடித்து தடுத்தார்.
இதை பார்த்த பூங்கொடி..ஏங்க..என்ன கொழுப்பு உங்களுக்கு ..என் கண் முன்னாலே சுடிதார் சுதா கையை பிடிச்சி இழுக்கிறீங்க.. கையை விடுங்க என்று அதட்ட கண்ணாயிரம் கையை விட்டார்.
அடுத்த வினாடி ..சுடிதார் சுதா பாபநாசம் ஆற்றில் இறங்க முயன்றது தண்ணீர் கொப்பளித்து கொண்டு ஓட..கண்ணாயிரம் ஓ..பாருங்க…தண்ணியில இறங்காதீங்க..ஆபத்து..ஆபத்து..என்று கத்தினார்.
அதைக் கேட்ட பூங்கொடி..என்னங்க..உங்களுக்கு மூளை குழம்பி போச்சா.. ஏன் தண்ணியில் இறங்கக் கூடாதுன்னு சொல்லுறீங்க என்று கேட்க கண்ணாயிரம் கடும் கோபத்தில் உங்க யாருக்கும் அறிவு கிடையாது… நாலு எழுத்து சரியா வாசிக்க தெரியாத எனக்கே கொஞ்சம் கொஞ்சம் அறிவு வேலை செய்யுது.. நீங்க சுத்தம்… உங்களுக்கு ஜெனரல் நாலாஜே வேலை செய்யல என்று குற்றம் சாட்டினார்.
அதைக் கேட்ட பூங்கொடி ஆத்திரத்தில் .. ஜெனரல் நாலேஜ் இருக்கட்டும்.. பாபநாசம் தண்ணீரில் ஏன் குளிக்கக் கூடாது.. அதை சொல்லுங்க என்று கேட்க.. கண்ணாயிரம்.. மெல்ல… ஏங்க பாபநாசம் தண்ணீரில் மின்சாரம் எடுக்காங்க என்று சுடிதார் சுதா சொல்லுச்சில்ல.. மின்சாரத்தை தொட்டா என்ன ஆகும் ஷாக் அடிக்கும். தொட்டால் ஷாக்கடிக்கும் போது மின்சாரம் எடுக்கும் தண்ணியில் மிதிச்சா என்ன ஆகும்.. ஷாக்கடிச்சு சாக வேண்டியது தான்.. தெரியுதா.. நான் கொஞ்சம் புத்திசாலிங்கிற தாலே விவரம் தெரிஞ்சுது.. அதனாலே சொல்லுறன் யாரும் தண்ணியில் இறங்காதீங்க… என்று கண்ணாயிரம் சொல்ல..
அதைக் கேட்ட அனைவரும் கண்ணாயிரத்தை முறைக்க.. கண்ணாயிரம்.. உண்மைக்கு மரியாதை கிடையாது.. அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதை அறிந்த பயில்வான்.. ஏங்க.. என்ன பிரச்சினை..என்று கேட்டபடி அங்கு ஓடி வர.. சுடிதார் சுதா அவரிடம். கண்ணாயிரம் சேட்டை தாங்க முடியல.. மின்சாரம் எடுக்கும் பாபநாசம் தண்ணியில் மிதிச்சா மின்சாரம் தாக்கும்.அதனாலே யாரும் இந்த தண்ணியில் இறங்க கூடாதுன்னு சொல்லுறாரு… நாங்க என்ன செய்ய என்று கேட்டார்.
அதைக் கேட்ட பயில்வான்..ஓ..இதுதான் பிரச்சினையா…கண்ணாயிரத்துக்கு அவர் பாணியில் பதில் சொன்னால் தான் அவர் ஏற்றுக்கொள்வார். பிரச்சினையை என்னிடம் விடுங்க..நான் பார்த்துக்கிறேன் என்றபடி கண்ணாயிரத்தை பார்த்தார்.
கண்ணாயிரம் நீ சொல்லுறது சரிதான். விவரம் தெரியாம மாட்டிக்கிட்டா ஆபத்துதான்.. நீ விவரம் சொன்னதுக்கு மிக்க நன்றி என்று கண்ணாயிரம் கையை குலுக்கினார்.
தொடர்ந்து கண்ணாயிரத்திடம்..பாரு கண்ணாயிரம்..நான் முன் கூட்டியே இது பற்றி விசாரித்து விட்டேன். மாலை ஆறு மணிக்கு மேல்தான் பாபநாசம் தண்ணியில மின்சாரம் எடுப்பார்கள்.. அதனாலே இரவு யாரும் பாபநாசம் தண்ணியில் குளிக்கக் கூடாதாம். அப்போது குளிச்சா ஆபத்தாம். அதனாலே காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை குளிக்கலாம். ஒண்ணும் செய்யாது. சரியா என்று பயில்வான் கேட்டார்.
கண்ணாயிரத்துக்கோ அந்த பதிலில் திருப்தி இல்லை.எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருக்கணும்..இந்த தண்ணியில் மின்சாரம் தயாரிக்காங்க என்று தெரிந்த பிறகு குளிக்கிறது தப்பு.. சரியா என்று கேட்டார்.
பயில்வான் பதில் சொல்லாமல் விழித்தார். பின்னர் சுடிதார் சுதா..கண்ணாயிரம்..நான் முதலில் பாபநாசம் தண்ணியில் இறங்குறேன். எனக்கு உயிரைப் பற்றி கவலை கிடையாது ..என்றபடி வேகமாக பாபநாசம் ஆற்றில் இறங்கினார்.
கண்ணாயிரம்..ஆ.என்று விளித்து பார்த்தபடி…நின்றார்.
ஆற்றில் இறங்கிய சுடிதார் சுதா..ஆ..நான் ஆற்றில் இறங்கிட்டேன்..நான் ஆற்றில் இறங்கிட்டேன்..என்னை தண்ணி ஒண்ணும் செய்யலை என்று கத்த.. இளைஞர்கள் ஓட்டு மொத்தமாக ஆற்றில் குதித்தனர்.
பூங்கொடி மெல்ல முகம் கழுவ..ஆற்றில் இறங்க முயற்சி செய்ய..கண்ணாயிரம் அவரது கையை தொட..பூங்கொடி..எரித்துவிடுவது போல் பார்க்க..சம்சாரம்..அது மின்சாரம்..என்ற பாடல் எங்கோ ஒலித்தது.
கண்ணாயிரம்..ஆஹா..அந்த மின்சாரத்தை விட சம்சார மின்சாரம் ஆபத்தானது என்று நினைத்து பூங்கொடியை தொட்ட கையை படக்கென்று எடுத்தார்.(கண்ணாயிரம் இன்னும் வருவார்.)
-வே.தபசுக்குமார்.புதுவை