May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

முதலை பயம் ஏற்படுத்திய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram who was afraid of the crocodile/ comedy story / Tabasukumar

9.8.2023
கண்ணாயிரம் சுற்றுலா பயணிகளுடன் கடையத்தில் இருந்து பாபநாசம் சென்றார். அங்கு பாபநாசம் ஆற்றில் மின்சாரம் எடுப்பதாக சுடிதார் சுதா சொன்னதால் ஆற்றில் குளித்தால் மின்சாரம் தாக்கும் எனவே யாரும் குளிக்க வேண்டாம். குளித்தால் ஆபத்து என்று கண்ணாயிரம் முதலில் சொன்னார்.
ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. சுடிதார் சுதா மற்றும் இளைஞர்கள் ஆற்றில் இறங்கி குளித்தார்கள். மின்சாரம் தாக்கும் என்று கண்ணாயிரம் எதிர்ப்பார்த்த நிலையில் அங்கு முதியவர் ஒருவர் வந்தார். யாருங்க.. ஆத்திலே நடுவில் குளிக்கிறது.. இது ஆபத்து..என்று எச்சரித்தார்.
உடனே கண்ணாயிரம் நான் முதலிலே ஆபத்து என்றுசொன்னேன் கேட்க மாட்டேங்கிறாங்க என்றார்.
உடனே முதியவர் கோபமாக ஏங்க.. இந்த ஆத்துல குளிக்கிறது ஆபத்து என்று முதலில் நான்தான் சொன்னேன் என்று சொல்ல..கண்ணாயிரம்..ம்.. நீங்க வருவதற்கு முன்பே நான்தான் ஆபத்துன்னு முதலில் சொன்னேன் என்க… முதியவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.கண்ணாயிரத்தைப் பார்த்து..யோவ்..யாருய்யா நீ..இப்படி உளறுகிறாய்.. நான் இந்த ஏரியா ஆளு. இங்கே எல்லாம் எனக்கு தெரியும். பாபநாசம் ஆத்துல ஆழமான பகுதியில் குளிச்சா ஆபத்து என்று நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன்.. இங்கே குளிச்சா சுழலில் சிக்கி இறப்பாங்க என்று எச்சரித்து இருக்கிறேன். ஆக.. இந்த ஆத்திலே குளிக்கிறது ஆபத்துன்னு முதலில் சொன்னது நான்தான் என்று அவர் சொன்னார்.
அதைக் கேட்டதும் கண்ணாயிரத்துக்கு பயங்கர கோபம் வந்தது. நாம எவ்வளவு கஷ்டப்பட்டு அறிவை பயன்படுத்தி இங்கே குளிக்கிறது ஆபத்துன்னு கண்டு பிடிச்சி சொல்லி இருக்கிறோம். ஆனா நம்ம புகழை இவர் தட்டிப் பறிக்கப் பார்க்கிறார்.. நான் விடுவேனா…என்று நினைத்த கண்ணாயிரம்… அந்த முதியவரிடம்.. ஏங்க.. சும்மா பிடிவாதம் பிடிக்கவேண்டாம். இதிலே குளிச்சா ஆபத்துன்னு முதலில் சொன்னது நான்தான். சும்மா என்னிடம் தகராறு பண்ணாதீங்க.. என்று சொல்ல முதியவர் விடாமல் நான்தான் முதல்ல என்று சொன்னார்.
கண்ணாயிரம் விட்டு கொடுக்காமல் நான்தான் முதல என்க முதியவரோ நான்தான் முதல என்க கண்ணாயிரம் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
நான்தான் முதல..முதல முதல..முதல.. முதல..என்று ஆவேசமாக கத்தினார். ஆனால் கண்ணாயிரம் ஆத்துல முதலை இருப்பதாக சொல்வதாக தவறாக நினைத்த சுடிதார் சுதாவும் இளைஞர்களும் அலறி அடித்துக் கொண்டு ஆற்றிலிருந்து வெளியே ஓடி வந்தார்கள்.
முதலை எதுவும் இல்லை என்று தெரிந்ததால் முதலை சொன்னது யாரு.. முதலை சொன்னது யாரு என்று இளைஞர்கள் கோபத்தில் கேட்க.. கண்ணாயிரம் முந்திக் கொண்டு முதலை சொன்னது நான்தான்.. என்க இளைஞர்கள் ஆத்திரத்தில்.. யோவ் அறிவு இருக்கா.. முதலை.. முதலை அப்படின்னு கத்தினியளே ஆத்துல முதலை எங்கே இருக்கு..ஒண்ணும் இல்லையே.. சும்மா பயம் காட்டிட்டு.. அமைதியா நிக்கிறீயளா என்று பிடி பிடி என்று பிடித்தார்கள்.
சுடிதார் சுதாவும்..ஏங்க..காவிரி ஆத்துலத்தான் முதலை உண்டு. குளிக்கப் போற ஆளை கடித்து குதறிடும். பாபநாசம்ஆத்துல முதலை கிடையாது. மீன்தான் இருக்கும். உண்மை தெரியாம எப்படி முதலை முதலைன்னு கத்தினீங்க சொல்லுங்க என்று கண்ணாயிரத்தை குலுக்கி எடுத்தாள்.
கண்ணாயிரத்துக்கு நாம சொன்னது தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க என்று புரிந்தது. அவர் மெல்ல..சுடிதார் சுதா..நான் கடிக்கிற முதலையை சொல்லல….இங்கே குளிச்சா ஆபத்துன்னு முதலில் சொன்னேன் என்பதை முதல முதல என்று என்னிடம் போட்டிப் போட்ட முதியவரிடம் சொன்னேன் என்று முதியவரை சாட்சிக்கு இழுத்தார்.
பிரச்சினை வருவதை அறிந்த முதியவர் எனக்கு ஒண்ணும் தெரியாது என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
அதைப் பார்த்த கண்ணாயிரம்.. சார்.. அவரை பிடிக்க சார்.. சார் அவரை பிடிங்க சார் என்ற படி விரட்டிக் கொண்டே ஓடினார்.

பூங்கொடியோ..ஓ..ஓடாதீங்க..திரும்பி வாங்க என்று கண்ணாயிரத்தை அழைத்தார். ஆனால் கண்ணாயிரம் தன்னை சிக்கலில் மாட்டிவிட்டவரை பிடித்து கிள்ளியாவது விட வேண்டும் என்று விரட்டி சென்றார்.
இரண்டு பேரும் பாலா வைத்து அங்கும் இங்கும் பாய அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.
கண்ணாயிரம் முதியவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடிக்க முயன்றார். முதியவர் தப்ப முயன்ற போது அவரது முடியை பிடித்து இழுக்க டோப்பா கையோடு வர மொட்டை தலையோடு முதியவர் ஓடி மறைந்தார். டோப்பா வை கையில் வைத்துக் கொண்டு கண்ணாயிரம் திகைத்த படி நின்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.