May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் வைத்த எலுமிச்சம் பழ பட்டிமன்றம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Lemon Pattimanram hosted by Kannayiram/ comedy story/ Tabasukumar

28.8.2023
கண்ணாயிரம் பாபநாசத்தில் குளிக்காமல் அகத்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுடன் சென்றார். அங்கு கண்ணாயிரத்துக்கு மூளை புது உற்சாகம் அடைய தலையில்எலுமிச்சம் பழம் தேய்த்து குளிக்க வைக்க அவரது மனைவி பூங்கொடி முயற்சி செய்து கொண்டிருந்தார். எலுமிச்சம் பழத்தை பார்த்தவுடன் அதுக்கு பெயர் வந்தது எப்படி என்று கண்ணாயிரம் கேட்க…எலி சாப்பிடாமல் மிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழம் என்று பயில்வான் கூறினார்.

ஆனால் அதை கண்ணாயிரம் ஏற்றுக்கொள்ளவில்லை.எலி மிச்சம் வைத்த பழம் என்றால் எலி மிச்சம் பழம் என்று தானே பெயர் வைக்க வேண்டும். அதைவிடுத்து எலுமிச்சம் பழம் என்று ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கண்ணாயிரம் கேள்வி கேட்டார்.
அதனால் பதில் அளிக்காமல் பயில்வான் ஓட்டம் பிடிக்க..சுடிதார் சுதா..என்ன ஆச்சு என்றபடி அங்கு வந்தார். அவரிடம் கண்ணாயிரம்.. எலுமிச்சம் பழத்துக்கு அந்த பெயர் ஏன் வந்துச்சுன்னு கேட்டேன். அதுதான் பயில்வான் ஓடுகிறார் என்று சொல்ல..சுடிதார் சுதா..ஓ.. அதுதான் பிரச்சினையா… நான்
சொல்லட்டுமா..எலுமிச்சம் பழத்துக்கும் ..எலும்புக்கு ஒரு தொடர்பு இருக்கு. எலும்பு மச்சை வலுவடைய எலுமிச்சம் பழம் பயன்படுகிறது. அதனால் எலுமிச்சம் பழம் என்று பெயர் வந்திருக்கலாம் என்றார்.
கண்ணாயிரம் உடனே..உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டார். அதற்கு சுடிதார் சுதா..அதுவா நான் கூகுளில் படித்துத்தது என்று பதில் அளிக்க.. அப்போ பயில்வான் எப்படி எலி மிச்சம் வைத்த பழம் என்று சொன்னார்.. பொய் சொல்லக் கூடாதல்லவா..கதை வேற சொன்னார்.. அவரை கூப்பிடுங்க என்று கண்ணாயிரம் சொல்ல பயில்வானை இளைஞர்கள் பிடித்து அழைத்து வந்தனர்.
என்ன பயில்வான் ..நீங்க எப்படி எலி மிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழமுன்னு எப்படி கதைவிட்டிங்க…சொல்லுங்க என்று கண்ணாயிரம் கேட்க.. பயில்வான்.. அது.. நான் கேள்விப்பட்டதை சொன்னேன்.. மற்றபடி எனக்கு ஒண்ணும் தெரியாது.. என்க.. கண்ணாயிரம்…ம்.. அப்படி சொல்லுங்க…நான் கொஞ்சம் விவரமா கேட்டதால உண்மை தெரிஞ்சுது.. இல்லைன்னா..எலிமிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழம் என்று ஆகிவிடும் அல்லவா.. சுடிதார் சுதா சரியாக சொன்னார்.. எலும்பு மச்சை பலமடைய பயன்படும் பழம் எலுமிச்சம் பழம் .. சரியா இருக்கு.. ஆனா சொல்லும் போது ஏதோ இடிக்குதே..என்னது..ஆமா..எலுமிச்சை பழம் என்று சொல்லி இருக்கலாம். எலுமிச்சம் பழம் என்று சொன்னதால் தான் குழப்பமாக உள்ளது. நாம் எலுமிச்சை பழம் என்று சொல்லலாம் ..குழப்பம் வராது என்றார்.
உடனே பயில்வான்..எலும்பு மச்சை பலனடைய பயன்படும் பழம் எலும்பு மச்சை பழம் என்றுதானே இருக்க வேண்டும் என்க சுடிதார் சுதா உஷாராகி முதலில் எலும்பு மச்சை பழம் என்றுதான் சொன்னார்கள். நாளடைவில் அது எலுமிச்சம் பழமாகிவிட்டது என்று சுடிதார் சுதா சொல்ல.. கண்ணாயிரம்..சபாஷ்.. இதுக்குதான் படிச்ச ஆளு வேணும்ன்னு சொல்லுறது என்று கண்ணாயிரம் புகழ்ந்தார்.

அப்போது அங்கு வந்த துபாய்காரர்..எலுமிச்சம் பழத்தை பற்றி பேசுறீங்களா…அதை பற்றி எனக்கும் ஒரு தகவல் தெரியும். எல் என்றால் தமிழில் ஒளி என்று பொருள். எலுமிச்சம் பழத்தில் மஞ்சள் நிறம் மிஞ்சி ஒளிர்வதால் எலுமிச்சம் பழம் என்றும் சொல்வார்கள் என்றார்.
அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு எது சரி என்று தெரியலையே என்று குழம்பினார்.
மூன்று பேர் சொன்னதையும் ஒப்பிட்டு பார்த்தபோது சுடிதார் சுதா சொல்வது சரி என்று கண்ணாயிரத்துக்கு தென்பட்டது.
எலும்பு கதையே பொருத்தமா இருக்கு சுடிதார் சுதா சொன்னது சரி என்று கண்ணாயிரம் சொல்ல.. பூங்கொடியோ எதிர்ப்பு தெரிவித்தார். எலும்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும் ஆகாது தெரியுமா.. எனக்கு மூட்டு வலி இருக்கு..புளிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருக்காங்க.. எலுமிச்சம் பழம்.. புளிப்பு எனக்கு ஒத்துக்காது.. எனவே நான் எலும்புக்கு எலுமிச்சம் பழம் பயன்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.
உடனே பயில்வான்..அப்போ..எலி மிச்சம் வைத்த பழம் எலுமிச்சம் பழம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்க… பூங்கொடி.. ஆ.. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சமையல் அறையில் தக்காளி பழம் எலுமிச்சம் பழம் வச்சிருந்தா தக்காளி பழத்தை எலி கடிச்சி தின்னும். ஆனா எலுமிச்சம் பழத்தை ஒண்ணும் செய்யாது. எலி அதை சாப்பிடாம மிச்சம் வச்சிடும் என்றார்.
பயில்வானும்..பாத்தீங்களா..எனது கருத்துக்கள்தான் சரியானது. எலி பிடிக்கிற கூண்டுக்குள் கருவாட்டை சுட்டுவைப்போம். தேங்காயை சுட்டு வைப்போம். எலுமிச்சம் பழத்தை வைப்போமா…வைக்க மாட்டோம். ஏன்னா..எலிக்கு எலுமிச்சம் பழ வாடை பிடிக்காது..என்றார்.
கண்ணாயிரம் வாய் பிளந்து கேட்டவர்..யார் கருத்தை ஆதரிப்பது என்று திணறினார்.
சுடிதார் சுதா தனது கருத்தை ஆதரிக்கும்படி சொல்ல பூங்கொடி தனது கருத்துக்கு ஆதரவு தரும்படி கேட்க…கண்ணாயிரம் விழி பிதுங்கினார்.
இறுதியில் மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லிவிட்டு பூங்கொடி முந்தானையில் முகத்தை மறைக்க..சுடிதார் சுதா முறைத்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.