கண்ணாயிரம் மீது விழுந்த பூனை/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readA cat that fell on the sky/ comedy story / Tabasukumar
16.2.2024
கண்ணாயிரம் விபத்தில் மறைந்துவிட்டதாக அவரது நண்பர்கள் கூறினர். கண்ணாயிரம் மாமனார் அருவா அமாவாசை அதை நம்பவில்லை. ஆனாலும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவர் அருவாளை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டு கண்ணாயிரம் வீட்டுக்குச் சென்றார். மகள் பூங்கொடியிடம் பாடி எங்கே.. டிரெங்க் பெட்டி எங்கே என்று கேட்க.. அவர் மச்சியில் இருக்கிறது என்றார்.
மேலே மச்சியில் மறைந்திருந்த கண்ணாயிரத்துக்கு பாடல் வாயிலாக பூங்கொடி சிக்னல் கொடுக்க கண்ணாயிரம் சோழக்காட்டு பொம்மை போல வேட்டியைச் சுற்றிக்கொண்டு தலையில் பானையை வைத்து மூடிக்கொண்டு மச்சியில் பதுங்கி நின்று கொண்டார்.
அருவாஅமாவாசையோ கண்ணாயிரம் பாடி டிரங்க் பெட்டியில் இருக்கும் அந்தப் பெட்டியைத் தூக்கிச் சென்று புதைத்துவிட வேண்டும் என்று அருவாஅமாவாசை நினைத்தார்.
ஆவி வந்தால் அருவாளைக்காட்டியவுடன் பயந்து ஓடிவிடும் என்று அவர் நினைத்தார். மகள் பூங்கொடியிடம் நீ முழுகாம இருக்க..உள்ளேப் போ..நான் மச்சிக்கு ஏறி டிரெங்பெட்டியை எடுக்கிறேன் என்றபடி ஏணிப்படியில் கால்வைத்தார்.
ஆவியை நினைத்து கால் நடுங்கியது. ஆ.. அருவா அமாவாசை.. பயப்படாதே.. ஸ்டெடி.. அட்டென்சன்.. ம்.. முன் வச்சக் காலை பின்வைக்கக் கூடாது.. ஒன்.. டூ.. திரி.. போர்.. பைவ்.. சிக்ஸ்.. என்று வேகமாக சத்தம் போட்டப்படி ஏணியில் ஏறினார்.
பதட்டத்தில் கால் தவற..ம்.. பயப்படாதே என்ற அருவாஅமாவாசை.. அடுத்து செவன் என்பதற்குப் பதிலாக எயிட் என்றபடி படியில் ஏற.. அதைக் கேட்ட கண்ணாயிரம்.. தப்பு.. தப்பு.. சிக்சுக்குப் பிறகு செவன் சொல்லல.. என்று குரல் கொடுக்க.. அருவாஅமாவாசை.. யாருய்யா அது.. எங்கிட்ட கணக்கு கேட்கிறது.. நான் பதட்டத்திலே ஏழாவது படியை மிதிக்காம எட்டாவது படியில காலை வச்சிட்டேன்.. அப்போ எயிட்டுதானே சொல்லணும்.. என்க.. கண்ணாயிரமோ..ஏழாவது படியேக் கிடையாது.. அதுபிஞ்சிக் கீழே விழுந்து ரொம்ப நாளாச்சு.. இல்லாதப் படியைக் கணக்கில் எடுக்கக் கூடாது என்க.. அதைக் கேட்க நீ யாருய்யா என்று அருவாஅமாவாசை சொல்ல நான்வீட்டு ஓனரு என்று கண்ணாயிரம் சொல்ல அருவாஅமாவாசை உஷ்ணமானார்.
நீ ஓனரா.. டிரங்பெட்டியிலேத் தான இருக்க என்று அருவாஅமாவாசை கேட்க.. கண்ணாயிரம்.. டிரங்பெட்டியிலா.. ஹா..ஹா..ஹா..ஹா.. என்று ஆவி போல் சிரித்தார்.
டேய்.. கன்பார்ம் ஆயிட்டுடா..ஆவி நீ வெளியிலேதான் சுத்துவ.. அது எனக்குத் தேவை இல்ல.. எனக்கு பாடிதான் முக்கியம்.. டிரங்பெட்டியை விடமாட்டேன் என்று அருவாஅமாவாசை ஏணிப்படியில் எட்டாவது காலை தடுமாறியபடி வைத்தார்.
கண்ணாயிரம் தன் மாமனாரைப் பயமுறுத்த நினைத்து.. டேய்.. அருவாஅமாவாசை.. திரும்பிப் போ.. இல்ல..ரத்தம் கக்கி சாவாய்.. போ.. ஹா..ஹா..என்று மிரட்ட.. அருவாஅமாவாசை.. யாரு..ஆவியா பேசுறது என்று கேட்க.. கண்ணாயிரமோ.. ஆவி எந்த காலத்திலடா பேசுச்சு.. நான்தான்டா பேசுறன்.. ஹ..ஹ..ஹா என்று கண்ணாயிரம் மிரட்டினார்.
அருவாஅமாவாசையோ…இதுக்கெல்லாம் நான் பய்படமாட்டேன்..பாடியிருக்கிற டிரங்பெட்டியைத் தூக்கிட்டுப் போகாம விடமாட்டேன்.. என்று அடுத்தப் படியில் ஏறினார்.
அதைக்கண்ட கண்ணாயிரம் பானை ஓட்டை வழியாகக் கண்டு.. ம்.. எவ்வளவுப் பயம் காட்டியும் பயப்படமாட்டேங்கிறாரே.. அங்கிருந்த ஒரு குலுக்கைக்குப் பின்னால் பதுங்கினார்.
அருவா அமாவாசை..ம்..எதுக்கும் பயப்படக் கூடாது..என்று நினைத்துக்கொண்டு அடுத்த அடியை எடுத்துவைத்தார். பயத்தில் கால்கள் தந்தி அடித்தன. படுபாவிப்பய. ஒழுங்கா நேருக்கு நேர் பேசப் பயப்படுவான். இப்போ..ஆவியா வந்து.. என்ன மிரட்டு மிரட்டுறான்.. வுட மாட்டேன்.. டிரங்பெட்டியைத் தூக்காம விடமாட்டேன் என்று அடுத்தப்படியில் கால்வைத்தார்.
இன்னும் ஐந்து படி ஏறணுமே என்றபடி மூச்சு வாங்கினார்.
கண்ணாயிரம்..என்ன.. டிரங்பெட்டி பாடி என்கிறாரு.. அதைக்கொண்டு போய் என்னப் பண்ணப்போறாரு..அந்தப் பெட்டியை எடுத்து மறைச்சி வச்சிட வேண்டியதுதான் என்றபடி டிரங்பெட்டியை தரதர என்று இழுத்து குலுக்கைக்குப் பின்னால் கொண்டு போனார்.
அருவாஅமாவாசை மடியில் பதுக்கிவைத்த அருவா இருக்கும் தைரியத்தில் ..ம்..எது வந்தாலும் சமாளிக்கலாம் என்றபடி..படிக்கட்டுகளை வேகமாகத் தாண்டினார்.
அப்போது வேகமாகப் பாய்ந்து வந்த பூனை ஒன்று கண்ணாயிரம் மேல் விழ.. பானை வழியாகப் பார்த்த கண்ணாயிரம்..ச்..சூ என்று விரட்ட.. அது பதறிப் போய் ஏணிவழியாக வந்த அருவா அமாவாசை மீது பாய.. அவர் ஆ..என்று அலறியச் சத்தம் எங்கும் எதிரொலித்தது.
கண்ணாயிரம்..எனக்கு ஒண்ணும் தெரியாது என்றபடி பதுங்கினார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.