நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன?; ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை தாக்கல்
1 min readWhat was the reason for actress Chitra’s suicide ?; Police report filed in high Court
20.1.2021
டெலிவிஷன் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நடிகை சித்ரா
பிரபல டெலிவிஷன் நடிகையான சித்ரா கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு லாட்ஜில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய அறைக்குள் தூக்கு போட்ட சம்பவ
நடிகை சித்ரா முதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவரது கணவர் ஹேம்நாத் (வயது 31) சித்ரவதை தாங்காமல்தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ராவின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரின் தாயார் விஜயா, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்குவிசாரணை நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் தங்களது விசாரணை அறிக்கை முழுவதையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ நானும் சித்ராவும், கடந்த ஆகஸ்டு மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். என்னோடும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்பாகவே பழகினார். ஆனால் இதை அவரின் தாயார் விரும்பவில்லை. எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, இந்த மாதத் தொடக்கத்தில் நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சித்ராவின் பெற்றோர் மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர்களது தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதால் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக சென்னை நசரத்பேட்டை போலீஸ் நிலைய ஆய்வாளர் சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2ந் தேதி-க்குள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.