April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் அறையில் கேட்ட அலறல் சத்தம்/நகைச்சுவை கதை /தபசுகுமார்.

1 min read

A Scream Heard in Kannayiram’s Room/Comedy Story/Tapaskumar.

24.2.2023
கண்ணாயிரம் தன் மனைவியுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றார்.உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்துக்கொண்டு அவர் அருவியில் குளிக்கச்சென்றதால் போலீசார் அவரைவிரட்டி அடித்தனர்.
இதனால் கோபம் அடைந்த கண்ணாயிரம் அங்கிருந்து ஓட்டலுக்கு வந்தார்.மனைவி வந்தவுடன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கண்ணாயிரம் தன் மனைவியிடம் நான் உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்து சென்றதால் அருவியில் குளிக்கவிடவில்லை .நான் என்ன செய்ய என்று கண்களை கசக்கியபடி சொன்னார். உடனே பூங்கொடி அவரை சமாதானப்படுத்தினார். நீங்க உடம்பில் உள்ள எண்ணையை துண்டுவச்சி துடைத்து எடுத்திடுங்க.. மதியம் சாப்பிட்டபிறகு மீண்டும் குளிக்கப் போகலாம் என்று சொன்னார்.
இதனால் உற்சாகமான கண்ணாயிரம் தன் சூட்கேசில் அமுக்கிவைத்திருந்த துண்டை தண்ணீர் குழாயில் நனைத்து தன் உடம்பில் உள்ள எண்ணையை துடைக்க முயன்றார். அப்போது எலி செத்தது போன்ற ஒருவாடை வீச..அது குழாய் தண்ணீரில் எலி செத்துக்கிடப்பதால் வரும் வாடை என்று கண்ணாயிரம் சொன்னார். அதைக்கேட்ட பூங்கொடி சந்தேகத்துடன் குழாய் தண்ணீரை சோதிக்க அதில் எந்தவாடையும் வராமல் இருக்க கண்ணாயிரம் தோளில் போட்டிருக்கும் துண்டில் இருந்துதான் வாடைவருகிறது என்பதை உணர்ந்து அதை பறித்து ஜன்னலுக்கு வெளியே வீசினார்.
கண்ணாயிரம் பாவமாக அதைப் பார்க்க பூங்கொடி தனது டிரங்பெட்டியிலிருந்து ஒரு துண்டை எடுத்து அவரிடம் கொடுத்தார். அந்த துண்டு நல்ல நறுமணத்துடன் இருந்தது. அதை வாங்கிய கண்ணாயிரம்..ஆ.. இந்த துண்டு நல்லா மணக்கு..பாச்சான் உருண்டை போட்டிருந்தியோ…அதான் மணக்கு…என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று குழாய் தண்ணீரில் துண்டை நனைத்து தன் உடம்பை துடைத்தார். ச்சே .நல்லா அருவியிலே குளிக்கலாமுன்னு எண்ணையை குளிர குளிர தேய்த்தேன்.. இப்ப..அதை துடைச்சி எடுக்கவேண்டியது இருக்கு…என்ன செய்ய…
குற்றாலத்துக்கு வந்து அருவியிலே குளிக்காம போகலாமா..குளிச்சே ஆகணும் என்றபடி வேகவேகமாக துண்டால் தலையை துடைத்தார். என்ன துடைச்சாச்சா.. இல்லையா.. என்று பூங்கொடி அதட்டினார்.
அப்போது ஹாலிங்பெல் ஒலிக்க பூங்கொடி கதவை திறந்தார்.மதிய சாப்பாடுக்கு ஆர்டர் கேட்டு ஓட்டல் பையன் வந்திருந்தான்.மீன் குழம்பு சாப்பாடு இரண்டு என்று பூங்கொடி ஆர்டர்கொடுத்தார். அதை பாத்ரூமில் இருந்து கேட்ட கண்ணாயிரம்…உயிரோட உள்ள மீனில் சமைச்சதா என்று கேட்டு அதிரவைத்தார்.
அதற்கு அந்த பையன் ஆமா குழம்பு கொதிக்கும்போது மீன் துள்ளிச்சி..நானே நேரில் பார்த்தேன் என்றான்.
கண்ணாயிரம் ஓ..அப்படியா..எதுக்கும் உஷாரா இருக்கணுமில்லையா..அதான் கேட்டேன் என்றார்.
அதற்கு அந்த பையன் சிரித்துக்கொண்டே…மீன் குழம்பு சாப்பாடு கொண்டுவர சென்றான்.
கண்ணாயிரம் உடம்பில் உள்ள எண்ணையை துடைத்தவாறு…அப்பாட..இது வேற எவ்வளவு கஷ்டமா இருக்கு என்றார்.
பூங்கொடி..என்னங்க ஆச்சி…எண்ணையை துடைச்சியளா இல்லையா ..சீக்கிரம் வெளியே வாங்க என்றார். கண்ணாயிரம்…ஆ …தொடைச்சாச்சு…தொடைச்சாச்சு.. இதோ வந்திட்டேன் என்று சொன்னார்.
பூங்கொடி..சரி..சரி.வாங்க..நான் முகம் கழுவணும் என்று சொல்ல கண்ணாயிரம் வேகவேகமாக வெளியே வந்தார்.
அவர் கையிலிருந்த துண்டை பறித்த பூங்கொடி பாத்ரூமுக்கு சென்று அதை துவைத்து காயப்போட்டார். கண்ணாயிரம்..அப்பாட. எண்ணையை துடைச்சாச்சு… நல்லா மீன்குழம்பு சாப்பிட்டுவிட்டு அருவியிலே குளிக்கப் போகலாம்… ஆ ஜாலி…என்று ஆடினார்.
இடுப்பில் எங்கோ பிடித்துக்கொண்டது.ஆ..இசகு பிசகா ஆடிட்டேன் போலிருக்கு..எங்கேயோ பிடிச்சிக்கிட்டு போலிருக்கே…என்று இடுப்பை தடவியபடி கட்டிலில் அமர்ந்தார்.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த பூங்கொடி..என்னங்க ஒருமாதிரி நெளிச்சிக்கிட்டு இருக்கீங்க..வயிறு வலிக்கா என்று கேட்டார்.
இல்லை..அருவியிலே குளிக்கப்போறேன்னுட்டு ஆடினேன்.. இடுப்பிலே ஏதோ பிடிச்சிக்கிட்டு..என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.
என்ன நீங்க… இப்படி குண்டக்க மண்டக்க ஆடினால் இடுப்பு பிடிக்கத்தான் செய்யும்.. அப்படியே படுங்க.. இடுப்பை தடவி விடுகிறேன் என்றார்.
கண்ணாயிரம் ஆ..என்றபடி படுக்கையில் படுத்தார். பூங்கொடி மெதுவாக அழுத்தி தடவிவிட்டார்.
கண்ணாயிரம் வலி தாங்காமல் அய்யோ..அம்மா என்று வேகமாக கத்தினார். கத்தாதீங்க…என்று பூங்கொடி கத்த கண்ணாயிரம் வாயை பொத்திக்கொண்டார்.
அந்த நேரத்தில் மீன்குழம்பு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு ஓட்டல்பையன் கண்ணாயிரம் அறை பக்கம் வந்தான். அவன் வந்ததை அறியாமல்…கண்ணாயிரம் அய்யோ யாராவது காப்பாற்றுங்களே ஏன்று கத்த பூங்கொடி அவரை இடுப்பை மேலும் வேகமாக அழுத்த..அய்யோ உயிர் போகுதே.. என்று அலறினார்.
இதைக்கேட்ட ஓட்டல்பையன் ஏதோ பிரச்சினை போல .யாரோ கழுத்தை நெரிக்காங்க போல..நமக்கு சிக்கல் வேண்டாம் என்று பயந்து மீன் குழம்பு சாப்பாட்டுடன் ஓட்டல் வரவேற்பறைக்கு ஓடி தகவலை சொன்னான்.
இதை உணராமல்.. கண்ணாயிரம்.. என்ன.. மீன் குழம்பு சாப்பாடு இன்னும் வரலை…வர வர ஓட்டலில் சர்வீஸ் சரியில்லை என்று முணங்கினார். பூங்கொடி..என்ன எப்பம்பாத்தாலும் சாப்பாடு..சாப்பாடு…ஒழுங்கா படுங்க.. நல்லா தேய்ச்சாத்தான் இடுப்பு வலி போகும்.. சத்தம்போடக்கூடாது.. எச்சரித்துவிட்டு அவர் இடுப்பை அழுத்தி தேய்க்க…
கண்ணாயிரம் ஓ..என்று அலறினார். என்னை கொல்லப்பாக்கிறா.. என்னை கொல்லப்பாக்கிறா.. என்று சத்தமிட.. ஓட்டல் ஊழியரை அழைத்துவந்த ஓட்டல் பையன்..ம்..பாத்தீங்களா..சத்தத்தை.. உயிர்போகப்போகுது.. சீக்கிரம் காப்பாத்தி ஆகணும்.. என்றான்.
ஓட்டல் ஊழியரும் ஆமா..ஏதோ சிக்கல்…உடனடியா காப்பாத்தியாகணும் என்றபடி ஹாலிங்பெல்லை ஓங்கி அழுத்தினார்.
கண்ணாயிரம்..அய்யோ உயிர் போகுதே என்று கத்த ஓட்டல் ஊழியர் போறுமை தாங்காமல் கதவை தட்டினார்
.உடனே…பூங்கொடி..யாரது இப்படி கதவை தட்டுறது.. என்றபடி எழுந்துவந்து கதவை திறக்க.. ஓட்டல் ஊழியர் கோபமுகத்துடன்..உள்ளே என்ன ஆச்சு…உள்ளே என்ன ஆச்சு.. கொல்லுறாளேன்னு சத்தம் கேட்டுச்சே..காப்பாத்துறதுக்குதான் கதவை தட்டினோம் என்றார்.
பூங்கொடி பற்களை கடித்தபடி… அவர்களை முறைக்க.. ஓட்டல் ஊழியரோ..அம்மா..கணவன் மனைவிக்குள்ளே ஆயிரம் பிரச்சினை இருக்கலாம்..அதுக்காக கழுத்தை நெரிக்கிறது..சரியில்ல என்று எகிறினார்.
பூங்கொடிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
என்னய்யா சொல்லுற..யார் கழுத்தை யார் நெரிச்சா..என் வீட்டுக்காரருக்கு இடுப்பு வலி..நடவிவிட்டேன்.. வலி தாங்காம.. உயிர்போகுதேன்னு கத்தி கலாட்டா பண்ணிட்டாரு என்றார்.
உண்மையிலே அப்படிதானா.. எங்களால நம்பமுடியல… அவர் அப்பாவி.. அவரை விட்டுருங்க…ஏடாகூடமா நடந்தா போலீஸ் கேசாகிடும் என்க… பூங்கொடி ஆத்திரத்தில்..ஆ என்று கத்த ஓட்டல் ஊழியரும் ஓட்டல்பையனும் தலை தெறிக்க ஓடினார்கள்.
என்ன பூங்கொடி என்ன பிரச்சினை என்று கண்ணாயிரம் அப்பாவியாக கேட்டார். எல்லாம் இந்த வாய்தான் பிரச்சினை என்று பூங்கொடி கண்ணியிரம் வாயில் இடிக்க.. அவர் ஓ என்று அழ…ஒரே கூத்தாக இருந்தது.
ஓட்டல் ஊழியர்கள் நாலுபேர் கண்ணாயிரம் அறையை நோக்கிவந்து கொண்டிருந்தார்கள்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.