May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மகாபாரத கதைகள் 3
குருவின் மனைவியால் தர்மசங்கடத்துக்கு ஆளான சீடர்/ அமுதன் என்ற தனசேகரன்

1 min read

Mahabharata Stories 3/ Disciple Embarrassed by Guru’s Wife/ Dhanasekaran alias Amuthan

தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய திரு தனசேகரன் அவர்கள் செய்தி சாரலுக்காக இக்கட்டுரையை படைத்துள்ளார்.

……….

5.2.2023
கங்கை நதியின் தாராள குணத்தால் அந்தப் பகுதி வனப்பு மிக்கதாக இருந்தது. அங்கே மிகப் பெரிய குளம். அந்தக் குளத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஒரு ரிஷியின் அழகான ஆசிரமம் அமைந்து இருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவர் தவுமியர் என்ற புகழ் பெற்ற ரிஷி. அவரிடம் உபமன்யு, ஆருணி, பைதன் என்ற மூன்று பேர் சீடர்களாக இருந்தார்கள். இதில் ஆருணி என்ற சீடர் குளத்தின் உடைந்த கரையை அடைத்த கதையை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அடுத்து ரிஷின் கட்டளையால் கண் பார்வை இழந்த சீடரின் கதையை கண்டோம்.
இனி குருவின் மனைவியால் தர்மசங்கடத்திற்கு ஆளான சீடர் கதையை சொல்கிறேன்…

5.2.2023
கங்கை நதியின் தாராள குணத்தால் அந்தப் பகுதி வனப்பு மிக்கதாக இருந்தது. அங்கே மிகப் பெரிய குளம். அந்தக் குளத்தில் இருந்து சற்றுத் தொலைவில் ஒரு ரிஷியின் அழகான ஆசிரமம் அமைந்து இருந்தது. அந்த ஆசிரமத்தின் தலைவர் தவுமியர் என்ற புகழ் பெற்ற ரிஷி. அவரிடம் உபமன்யு, ஆருணி, பைதன் என்ற மூன்று பேர் சீடர்களாக இருந்தார்கள். இதில் ஆருணி என்ற சீடர் குளத்தின் உடைந்த கரையை அடைத்த கதையை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அடுத்து ரிஷின் கட்டளையால் கண் பார்வை இழந்த சீடரின் கதையை கண்டோம்.
இனி குருவின் மனைவியால் தர்மசங்கடத்திற்கு ஆளான சீடர் கதையை சொல்கிறேன்…

ரிஷி தவுமியரிடம் சீடராக இருந்த பைதன், பின்னாளில் தனியாக ஆசிரமம்
அமைத்து, அதில் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரிடம் உதங்கர் என்பவர் சீடராக இருந்தார்.
ரிஷி பைதன், ஒரு நாள் தூர தேசம் ஒன்றில் யாகம் நடத்துவதற்காக ஆசிரமத்தின் பொறுப்புகளை உதங்கரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
தனியாக இருந்த உதங்கரை, குரு மனைவியின் தோழி சந்தித்து, ‘’உங்கள் குருவின் மனைவி இப்போது ருது ஸ்நானம் செய்து இருக்கிறார். ஆனால் உங்கள் குரு இப்போது இங்கே இல்லை. எனவே, இந்த வேளையில் நீங்கள் குருவின் மனைவியுடன் கூடி இருக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தாள்.
அதற்கு உதங்கர், ‘’நான் இந்தத் தகாத காரியத்தைச் செய்ய மாட்டேன்’’ என்று கூறி மறுத்து விட்டார்.
சில நாட்கள் கழித்து ஆசிரமத்துக்குத் திரும்பிய பைதன், நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். உதங்கரின் குணத்தைப் பாராட்டினார்.
அப்போது உதங்கர், ‘’குருவே, எனது ஆசிரமப் படிப்பு முடிந்துவிட்டது. நான் தங்களிடம் இருந்து விடை பெற வேண்டும். அதற்கு முன் குரு தட்சணையாக தங்களுக்கு நான் என்ன தர வேண்டும்’’என்று பைதனிடம் கேட்டார்.
‘’அண்டை நாட்டில் உள்ள பவுஷ்யன் என்ற மன்னரின் மனைவி, காதில் அழகான குண்டலங்களை அணிந்து இருக்கிறாள். அவற்றை என் மனைவி விரும்புகிறாள். எனவே அந்த மன்னரின் மனைவியிடம் இருந்து அந்தக் குண்டலங்களைப் பெற்று, நான்கு நாட்களுக்குள் திரும்பி வந்து என் மனைவியிடம் கொடுப்பாயாக’’ என்று ரிஷி
பைதன் சொன்னார்.
உடனே உதங்கர், குண்டலங்களைப் பெற்று வருவதற்காக பவுஷ்யனின் நாட்டுக்குப் புறப்பட்டார். காட்டு வழியாகச் சென்றபோது, பெரிய யானை மீது அமர்ந்தபடி ஒருவர் வந்தார்.
அவர், உதங்கரைப் பார்த்து, ‘’உதங்கரே, இந்த யானையின் கோமியத்தை குடியுங்கள்’’ என்று கூறினார்.
ஆனால் உதங்கர் மறுத்து விட்டார்.
உடனே யானை மீது இருந்தவர், ‘’கூச்சப்படாமல் இந்தக் கோமியத்தைக் குடியுங்கள். முன் ஒரு காலத்தில் உங்கள் குருவும் இந்தக் கோமியத்தைக் குடித்தார்’’ என்றார்.
அதன் பிறகு உதங்கர், அந்தக் கோமியத்தைக் குடித்தார். மனச் சஞ்சலத்துடன் அருந்தியதால், அவசரத்தில் வாயை சுத்தம் செய்யாமல் அங்கு இருந்து புறப்பட்டுவிட்டார்.
நேராக பவுஷ்யனை சந்தித்த உதங்கர், ‘’மன்னரே! நான் உங்களிடம் யாசகம் கேட்டு வந்து இருக்கிறேன். என் குருவுக்கு காணிக்கையாகக் கொடுக்க உங்கள் மனைவியின் குண்டலங்களைப் பெற்றுத் தரவேண்டும்’’ என்றார்.
இதனைக் கேட்ட பவுஷ்யன், ‘’அந்தப்புரத்திற்குச் சென்று என் மனைவியை சந்தித்து குண்டலங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றார்.
அந்தப்புரத்திற்குச் சென்ற உதங்கர், அங்கே பவுஷ்யனின் மனைவி இல்லை
என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்து, மீண்டும் பவுஷ்யனிடம் வந்தார்.
அப்போது பவுஷ்யன், சுத்தமானவர்களின் கண்களுக்கு மட்டுமே எனது மனைவி தென்படுவாள். நீங்கள் சுத்தம் (ஆஸமனம்) செய்து கொள்ளவில்லையா’’ என்று கேட்டார்.
வழியில் அவசரத்தால் வாயைக் கழுவாமல் வந்ததாக உதங்கர் கூறினார்.
பின்னர் அவர், தன்னை நன்றாகச் சுத்தம் செய்து கொண்டு, பவுஷ்யனின்
மனைவியைச் சந்தித்து அவரிடம் இருந்து குண்டலங்களை வாங்கிக் கொண்டார்.
அப்போது பவுஷ்யனின் மனைவி, ‘’இந்தக் குண்டலங்கள் மீது நாகராஜனாகிய தஷகன் மோகம் கொண்டு இருக்கிறான். எனவே கவனமாக எடுத்துச் செல்லுங்கள்’’ என்று கூறினாள்.
உதங்கர் அங்கு இருந்து புறப்பட்டபோது, அவரை விருந்து சாப்பிட்டு பிறகு செல்லலாம் என்று பவுஷ்யன் கூறினார். மன்னரின் அழைப்பை உதங்கர் ஏற்றுக் கொண்டார்.
விருந்துக்கு ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. ஆனால், சாப்பிடும்போது பிரச்சினை உருவானது.
உணவு ஆறிப்போய் இருக்கிறது என்றும், அதில் பெண்ணின் முடி ஒன்று கிடக்கிறது என்றும் கூறிய உதங்கர், ‘’இந்த அசுத்தமான உணவைக் கொடுத்த உனக்குக் கண்கள் இல்லாமல் போகட்டும்’’ என்று சாபம் கொடுத்தார்.
உடனே பவுஷ்யனும், ‘’குற்றம் இல்லாத அன்னத்தைக் குறை கூறியதால் உனக்குக் குழந்தைகள் இல்லாமல் போகட்டும்’’ என்று பதில் சாபம் கொடுத்தார்.
அதன் பிறகு உதங்கர், அங்கே இருந்து குண்டலங்களுடன் புறப்பட்டார்.
வழியில் ஓரிடத்தில் சென்றபோது, அவருக்குத் தாகம் எடுத்தது. எனவே குண்டலங்களை தரையில் வைத்துவிட்டு, நீர் இருக்கும் இடத்திற்குச் சென்றார்.
அப்போது அங்கு சாமியார் வடிவில் வந்த நாகராஜனான தஷகன், தரையில் இருந்த அந்தக் குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஒரு வளைக்குள் சென்று ஒளிந்து கொண்டது.
இதைப் பார்த்து உதங்கர் அதிர்ச்சி அடைந்தார். மன்னரின் மனைவி எச்சரித்தும் குண்டலங்களைப் பறிகொடுத்து விட்டேனே என்று வேதனைப்பட்டார்.
நாகராஜனான தஷகன் சென்ற அந்த வளையைத் தோண்டி, அதில் இருக்கும் குண்டலங்களை எடுக்க முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை.
வளைக்குள் இருந்த குண்டலங்களை எடுக்க முடியாமல் தவித்த உதங்கருக்கு உதவி செய்ய அங்கே இந்திரன் வந்தார். தஷகன் புகுந்து இருந்த வளைக்குள் இந்திரன் அக்னியை அனுப்பினார். அதிக வெப்பம் காரணமாக, வளைக்குள் இருக்க முடியாமல் தவித்த தஷகன், வெளியே வந்து குண்டலங்களை உதங்கரிடம் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டது.
குண்டலங்களைப் பெற்ற உதங்கர், இந்திரன் கொடுத்த மாயக் குதிரை உதவியால் ஆசிரமத்துக்கு விரைந்து வந்து, குறித்த நேரத்துக்குள் தனது குருவின் மனைவியிடம் குண்டலங்களை ஒப்படைத்தார்.
இதனால் குருவும், அவரது மனைவியும் மகிழ்ச்சி அடைந்து அவரை வாழ்த்தினார்கள்.
பின்னர் தனது குரு பைதனிடம் விடை பெற்றுக் கொண்டு, உதங்கர் அங்கே இருந்து புறப்பட்டார்.
அப்போது, தன்னிடம் இருந்த குண்டலங்களைப் பறித்த தஷகனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதற்குத் தகுந்த மன்னர் இந்திரபிரஸ்தாவைச் சேர்ந்த ஜனமேஜயன் என்பதை அறிந்து அங்கே சென்றார், உதங்கர்.
அவர் ஜனமேஜயனை சந்தித்து, ‘’உங்கள் தந்தை குற்றம் செய்யாத நிலையிலும் அவரைக் கொன்றது தஷகன் என்ற பாம்பு அரசன். எனவே தஷகனை அழிக்க யாகம் செய்ய வேண்டும்” என்று வற்புறுத்தினார்.
உதங்கர் கூறிய தகவலைக் கேட்ட பின்னர்தான் தனது தந்தை எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதை ஜனமேஜயன் தெரிந்து கொண்டார். இதனால் அவர் தஷ்கனை அழிக்க உதவுவதாக ஒப்புக் கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் இருந்துதான் மகாபாரதக் கதை ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டவர்களின் வாரிசான பரீட்சித்து என்ற மன்னரின் மகன் ஜனமேஜயன், தஷகனை அழிப்பதற்காகச் சர்ப்ப யாகம் என்ற வேள்வியைச் செய்தபோது, அவருக்கு மகாபாரத நிகழ்வுகள் முழுவதுமாக எடுத்துக் கூறப்படும் விதமாக மகாபாரதக் கதை விரிவடைகிறது.
மகாபாரதத்தின் தொடக்கத்திற்குக் காரணம் என்பதால், உதங்கரின் கதை, மகாபாரத இதிகாசத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிட்டது. (மேலும் கதை உண்டு)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.